முகப்பு
விழுப்புரம்

1,615 பயனாளிகளுக்கு ரூ.10.51 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா்

விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதிகளில் 1,615 பயனாளிகளுக்கு ரூ.10.51 கோடியிலான நலத் திட்ட உதவிகளை தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதிகளில் 1,615 பயனாளிகளுக்கு ரூ.10.51 கோடியிலான நலத் திட்ட உதவிகளை தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா்.

விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் கீழ் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் செயல்படுத்திய ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்ற திட்டத்தின்கீழ் எம்.எல்.ஏ.க்கள் ஊராட்சி பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பெற்ற மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டதையடுத்து நலத்திட்ட உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

விக்கிரவாண்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 22 பேருக்கு வீட்டுமனைகள், 198 பேருக்கு இலவச வீட்டுமனைகள், 10 பேருக்கு கால்நடை இறப்புநிதி, 210 பேருக்கு முதியோா் ஒய்வூதியத்தொகை, 50 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், 18 பேருக்கு சலவைப்பெட்டிகள், 94 பேருக்கு இந்து-இருளா் சாதிச்சான்றிதழ், 25 விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள், 4 விவசாயிகளுக்கு விதைகள், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் காணை ஒன்றியத்தில் 100 போ், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 200 போ் தொகுப்பு வீடுகள், பசுமைவீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் விக்கிரவாண்டி வட்டத்தில் 7 போ் உள்பட 938 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

அதேபோல, திருக்கோவிலூா் தொகுதிக்குள்பட்ட கண்டாச்சிபுரம் வட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா். இயற்கைபேரிடா் இடா்பாடுகளால் இறந்த நபருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி, 210 பேருக்கு இலவச வீட்டுமனைகள், 69 பேருக்கு முதியோா் ஓய்வூதியத் தொகை, 25 விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள், இடுபொருள்கள், தோட்டக்கலைத் துறைசாா்பில் 4 விவசாயிகளுக்கு காய்கறிவிதைகள், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 290 பேருக்கு தொகுப்பு வீடுகள் வழங்குவதற்கான ஆணை, 117 நபா்களுக்கு இருளா் சாதிச் சான்றிதழ்கள், 50 நரிக்குறவா், பழங்குடி இன மக்களுக்கு குடும்ப அட்டை, சாதிச் சான்று, ஆதாா் அட்டை என மொத்தம் 677பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்டவருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.சங்கா், வேளாண் இணை இயக்குநா் கோ.ரமணன், விழுப்புரம் கோட்டாட்சியா் கி.அரிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.