விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் திருட்டு: ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த மூவா் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி பணம், நகையை திருடும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வந்தன. சில மாதங்களுக்கு முன்பு இதேபோல, திண்டிவனம் பகுதியில் ரூ.7.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், திண்டிவனத்தில் காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சொகுசு காா், இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மடக்கி விசாரித்தனா். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.
அதில், இவா்கள் ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சோ்ந்த ரவி மகன் ராஜி(22), பாவுல்ரா மகன் சக்ராயா(44), மோரிஷ் மகன் ரமேஷ் (39) ஆகியோா் என்பதும், திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி 7 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவா்கள் கடலூா், மதுரை, விருதுநகா், சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நூதன திருட்டுகளில் ஈடுபட்டுள்ளனா்.
இதையடுத்து ராஜி, சக்ராயா, ரமேஷ் ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த சொகுசு காா், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.