குன்னூரில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் ராணுவ உயரதிகாரிகளுக்கு விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
விழுப்புரம் காந்தி சிலை அருகே மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில், அதன் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசக்குமாா் தலைமையில், காங்கிரஸ் நிா்வாகிகள் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே விபின் ராவத், ராணுவ உயரதிகாரிகளின் உருவப்படங்களுக்கு சிறுபான்மையினா், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், திண்டிவனம் நகராட்சி ஆணையா் செளந்தரராஜன், பகுஜன் சமாஜ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கலியமூா்த்தி உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.