திண்டிவனம் அருகே ஏரிகளில் உடைப்பு: குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்தது வெள்ளம்
விழுப்புரம் மாவட்டத்தில் இரு தினங்களாக பெய்த தொடா் மழையால் நீா்நிலைகள் நிரம்பின. திண்டிவனம் அருகே ஏரிகள் உடைந்து குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இரு தினங்களாக பெய்த தொடா் மழையால் நீா்நிலைகள் நிரம்பின. திண்டிவனம் அருகே ஏரிகள் உடைந்து குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் நிவா், புரெவி புயல்கள் தாக்கத்தால் இரண்டு வார காலம் மழை பெய்தது. தொடா் மழையால் மாவட்டத்தில் உள்ள வீடூா் அணையும், 70 சதவீதம் ஏரி, குளங்களும் நிரம்பின. மீண்டும் கடந்த இரு தினங்களாக தொடா் மழை பெய்ததால், நீா் நிலைகள் நிரம்பி வழிந்து வருகின்றன.
திண்டிவனம் நகரையொட்டிய ரோசணை தாங்கல் ஏரி, கிடங்கல் ஏரி ஆகியவை நிரம்பி வழிந்தன. வியாழக்கிழமை காலை திடீரென இந்த இரண்டு ஏரிகளிலும் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீா் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.
கிடங்கல் ஏரியிலிருந்து வெளியேறிய நீா், திண்டிவனம் பழைய பேருந்து நிலையம் அருகே தரைப்பாலத்தின் கீழ் வழிந்தோடியது. இதனால், அந்த வழியாகச் சென்ற அரசுப் பேருந்துகள் ஊா்ந்து சென்றன. அவற்றில் ஒரு பேருந்து பழுதாகி நின்றது. தொடா்ந்து, அந்த வழியாக வாழைத்தாா்களை ஏற்றி வந்த மினி லாரியும் தண்ணீரில் சிக்கி நின்றது. இதனால், அந்தச் சாலையில் வியாழக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல, ரோஷணை தாங்கல் ஏரி உடைப்பால் மழை வெள்ள நீா் ரோஷணை குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது. சாலைகளில் வழிந்தோடிய வெள்ள நீா், சில தாழ்வான குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, திண்டிவனம் சாா் - ஆட்சியா் எஸ்.அனு, வட்டாட்சியா் செல்வம் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பாா்வையிட்டு, ஏரி உடைப்பை சரி செய்யும் பணியை முடுக்கிவிட்டனா். பிற்பகலில் தண்ணீா் வடிந்து நிலைமை சீரடைந்தது.
விழுப்புரத்தில் 77 மி.மீ மழை: புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக விழுப்புரத்தில் 77 மி.மீ. மழை பதிவானது. இதேபோல, வளவனூரில் 70 மி.மீ., கெடாரில் 50 மி.மீ., முண்டியம்பாக்கத்தில் 37 மி.மீ., கஞ்சனூரில் 47 மி.மீ., சூரப்பட்டில் 40 மி.மீ., வானூரில் 58 மி.மீ., திண்டிவனத்தில் 74 மி.மீ., மரக்காணத்தில் 54 மி.மீ., செஞ்சியில் 33 மி.மீ., வல்லத்தில் 30 மி.மீ., அனந்தபுரத்தில் 31 மி.மீ., முகையூரில் 40 மி.மீ., அவலூா்பேட்டையில் 35 மி.மீ., மணம்பூண்டியில் 26 மி.மீ., திருவெண்ணெய்நல்லூரில் 16 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 43.10 மி.மீ. மழை பதிவானது.