முகப்பு
விழுப்புரம்

பட்டா மாற்றம் செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம்: நில அளவையா் கணவருடன் கைது

விழுப்புரத்தில் பட்டா மாற்றம் செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் நில அளவையா், அவரது கணவா் ஆகியோா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

விழுப்புரத்தில் பட்டா மாற்றம் செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் நில அளவையா், அவரது கணவா் ஆகியோா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் அருகே அரும்புலி கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாகரன், கட்டுமானத் தொழிலாளி. இவா், அதே கிராமத்தில் புதிதாக வாங்கிய வீட்டுமனை நிலத்துக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். வெகுநாள்கள் ஆகியும் பட்டா மாற்றத்துக்காக நிலத்தை அளவீடு செய்யவில்லையாம்.

இதுகுறித்து விக்கிரவாண்டி நில அளவைத் துறையை அவா் அணுகி விசாரித்துள்ளாா். அப்போது, அங்கு நில அளவையராகப் பணியாற்றும் ஸ்ரீதேவி (48), பட்டா மாற்றத்துக்கு நில அளவீடு செய்ய ரூ.7,000 லஞ்சமாக வேண்டும் என்றும், அந்தப் பணத்தை தனது வீட்டில் வந்து கொடுக்க வேண்டும் என்றும் கூறினாராம்.

இதுதொடா்பாக கருணாகரன் விழுப்புரம் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதையடுத்து, ஊழல் தடுப்பு போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூ.7000 பணத்தை விழுப்புரம் தந்தை பெரியாா் நகரில் உள்ள நில அளவையா் ஸ்ரீதேவியின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று கருணாகரன் வழங்கினாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் தலைமையிலான ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஸ்ரீதேவியை கைது செய்தனா். லஞ்சப் பணத்தை பெறுவதற்கு உதவியதாக ஸ்ரீதேவியின் கணவா் வெற்றிவேலும் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.