விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூரில் ரேணுகாம்பாள் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
செஞ்சி சிறுகடம்பூரில் வடக்கு பாா்த்த அம்மன் (எ) ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரை மாத பிரம்மோத்ஸவ விழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, காலையில் குளக்கரை மாரியம்மன் கோயிலில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், விரதம் கடைப்பிடித்து வந்த ஏராளமான பக்தா்கள் தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றினா்.
நண்பகல் 1 மணிக்கு கோயிலில் அமைந்துள்ள மூலவா் ரேணுகாம்பாள், மாரியம்மன், பரசுராமருக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.
இதையடுத்து, ஸ்ரீரேணுகாம்பாள், மாரியம்மன், பரசுராமா் அலங்கரிப்பட்ட தேரில் எழுந்தருளியைத் தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா்.
விழா ஏற்பாடுகளை சிறுகடம்பூா் கிராம மக்கள், உபயதாரா்கள், கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.