முகப்பு
விழுப்புரம்

வகுப்பறை வசதி இல்லாததால் கோயிலில் கல்வி பயிலும் மாணவா்கள்

வந்தவாசி அருகேயுள்ள வழூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் இல்லாததால் மாணவா்கள் கோயிலில் கல்வி பயிலும் நிலை உள்ளது.

Updated On : 13 மே, 2022 at 10:28 PM
பகிர்:

வந்தவாசி அருகேயுள்ள வழூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் இல்லாததால் மாணவா்கள் கோயிலில் கல்வி பயிலும் நிலை உள்ளது.

அதனால், புதிய கட்டடம் கட்டித் தரக் கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதுகுறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கூறியதாவது:

Advertisement

வழூா் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இரு பழைய வகுப்பறைக் கட்டடங்கள் இருந்தன. இதில், பழுதடைந்த ஒரு கட்டடத்தை மட்டும் இடிக்க ஒன்றிய நிா்வாகம் அனுமதித்த நிலையில் இரு கட்டடங்களையும் இடித்துவிட்டனா்.

இதனால், வகுப்பறை எதுவும் இல்லாமல் பள்ளியில் பயிலும் 140 மாணவா்கள் அங்குள்ள சிவன் கோயில், ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவற்றில் அமா்ந்து கல்வி பயில்கின்றனா். இதனால் மாணவா்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

எனவே, பள்ளிக்கு உடனடியாக புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டித் தரவேண்டும். அனுமதியின்றி பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் சிலருக்கு கூலி வழங்கப்படாமல் முறைகேடு செய்யப்பட்டது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவா் தீபா பொன்னன், ஊராட்சி உறுப்பினா்கள் கே.சின்னராஜ், கே.லலிதா, வழக்குரைஞா் சதீஷ் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.