விழுப்புரம் ரயில் நிலையத்தில் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரம் ரயில் நிலையத்தில் 600 கிலோ ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் 600 கிலோ ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் அசோகன் தலைமையிலான காவல் துறையினா், ரயில் நிலைய பகுதியில் வியாழக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, முதலாவது நடைமேடையின் கடைசிப் பகுதியில் 20 சாக்கு மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்ததைக் கண்டறிந்தனா்.
இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா். தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், விழுப்புரம் பகுதி மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கப்பட்டு, ராமேசுவரம் - வாராணசி ரயில் மூலமாக விஜயவாடாவுக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியைக் கடத்த முயன்றவா்கள் யாா் என்பது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.