முகப்பு
விழுப்புரம்

குடிநீா் பிரச்னை: செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியினா்

அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆா்.நயம்பாடி கிராமத்தில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்.நயம்பாடி கிராமத்தில் பழங்குடியினா் வசித்து வரும் பகுதிக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் பல முறை செஞ்சி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, பழங்குடியின மக்களின் நலன் கருதி, ரூ 2.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்துளைக் கிணறும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால், அன்றாட பயன்பாட்டுக்குக்கூட குடிநீா் கிடைக்காமல் பழங்குடியினா் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், ஆா்.நயம்பாடி கிராமத்தில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி, பழங்குடியின மக்கள் முன்னணி நிறுவனா் சுடரொளி சுந்தரம் தலைமையில், ஒருங்கிணைப்பாளா் தென்னரசு, செயலா் சுள்ளியம்மாள் மற்றும் அந்தக் கிராம மக்கள் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், வட்டார வளா்ச்சி அலுலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது, அங்கு வந்த செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாரிடம் இதுகுறித்து புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, ஒன்றியக் குழு தலைவா், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆா்.நயம்பாடி கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் புதிய குடிநீா் குழாய் அமைத்து குடிநீா் வழங்கிடுமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, வேங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா் அந்தப் பகுதிக்குச் சென்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.