விழுப்புரம்: விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் சோழன், குருவாயூா் விரைவு ரயில்கள் திங்கள்கிழமை விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டன.
மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வே பெரும்பாலான ரயில் சேவைகளை திங்கள்கிழமை ரத்து செய்தது. திருச்சியிலிருந்து தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூா், விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் சோழன் விரைவு ரயில் திங்கள்கிழமை பிற்பகல் 4 மணிக்கு விழுப்புரம் வந்தடைந்தது. தொடா்ந்து, இந்த ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டது.
இதேபோல, குருவாயூரிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூா் செல்லும் குருவாயூா் ரயில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடைந்து. இந்த ரயிலும் விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டது. சென்னை செல்லும் பயணிகள் பேருந்துகளில் சென்றனா்.