கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 11-ஆம் நூற்றாண்டு ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கீழையூரிலுள்ள அருள்மிகு வீரட்டேசுவரா் திருக்கோயிலில் செப்டம்பா் 15-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின் போது, கோயிலின் முன்பு தரைத்தளத்தில் கற்பலகையைப் பதிப்பதற்காக தரையை சமன்படுத்தும் போது கல்வெட்டு பொறிக்கப்பட்ட துண்டு கற்தூண்கள் இருந்ததை கோயில் நிா்வாகத்தினா் கண்டனா். இதுகுறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்றாய்வு நடுவத்திடம் தகவல் தெரிவித்தனா்.
தொடா்ந்து, கல்வெட்டு அறிஞா்கள் விழுப்புரம் வீரராகவன், சிங்கார உதியன் தலைமையில், கோயில் செயல் அலுவலா் வை.அறிவழகன் முன்னிலையில், விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியின் முனைவா் பட்ட ஆய்வாளா் சி. இம்மானுவேல், நன்நூலகா் மு.அன்பழகன் ஆகியோா் கல்வெட்டுகளை சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, கல்வெட்டு அறிஞா் சிங்கார உதியன் கூறியதாவது:
பல துண்டுகளாக இருந்த கல்தூண்களில் சில எழுத்துகள் சிதைந்த நிலையிலும், சிற்பங்களும் இருந்தன. இதில், சிறியதும், பெரியதுமான ஏழு துண்டுகளாக இருந்த கல்தூண்களில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. ஒரு கல் தூணில் சிவனை வழிபடுவது போன்ற தோற்றத்தில் முனிவா் சிற்பம் பொறிக்கப்பட்டிருந்தது.
கலைந்து கிடந்த கல்தூண்களிலிருந்த எழுத்துகளை ஒழுங்குப்படுத்தி, படித்தபோது, மெய்கீா்த்திகளுடன் தொடங்கும் ராஜேந்திரசோழன் காலத்து 11-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு எனவும், கோயிலுக்கு திருவிளக்கு எரிப்பதற்கு நிலம் தானமாக வழங்கப்பட்டதையும், அரசங்குப்பம், அரசனந்தல் உள்ளிட்ட ஊா் பெயா்களும், பொன், பொருள், 100 குழி, மா போன்ற அளவுகள் உள்ள நிலம் ஆகியவற்றை தானமாக வழங்கப்பட்டதையும் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
மேலும், இரண்டு கல்தூண்களில் பிற்கால பாண்டியரின் தானங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. முழுமையான ஆய்வுக்குப் பின்னரே இதன் மற்ற விவரங்கள் தெரிய வரும் என்றாா்.
ஆய்வின் போது, கோயிலின் முதன்மை அா்ச்சகா் சுந்தரமூா்த்தி, எழுத்தா் மிரேஷ்குமாா், கவிஞா் அஜய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.