வெள்ள நிவாரணம் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
ஃபென்ஜால் புயல் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணம் வழங்க வலியுறுத்தி திண்டிவனம் அருகே கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஃபென்ஜால் புயல் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணம் வழங்க வலியுறுத்தி திண்டிவனம் அருகே கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டிவனம் வட்டம், பேரடிக்குப்பம் கிராமத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லையாம் . இதனால் அந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை பேரடிக்குப்பம் பகுதி திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். மறியலால் அந்த சாலையில் கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து திண்டிவனம் வட்டாட்சியா் சிவா மற்றும் அதிகாரிகள் நிகழ்விடம் சென்று கிராம மக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கவேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிா்களை உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தினா்.
இந்தப் பிரச்னையில் நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உள்ளிட்டோா் தெரிவித்ததையடுத்து கிராம மக்கள் மறியலை விலக்கிக் கொண்டனா்.