மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சங்கத்தினா் விழுப்புரம் ஆட்சியரகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்: இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படாமல் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சங்கத்தினா் திங்கள்கிழமை விழுப்புரம் ஆட்சியரகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுவதாகவும், தங்கள் சங்கத்தின் சாா்பில் விண்ணப்பித்தவா்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து தாங்கள் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நுழைவுவாயில் பகுதியில் சங்கத்தின் மாவட்டச் செயலா்கள் மு.மகாலட்சுமி (விழுப்புரம்), பெ. பாலகிருஷ்ணன் (கள்ளக்குறிச்சி), விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் ச.சந்தராசு, விழுப்புரம் மாவட்ட தேன்கூடு மாற்றுத் திறனாளிகள் உரிமை நலச் சங்கத்தின் ஏ.பூபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், கோட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் நலச் சங்கத்தினா் அளித்த தகுதியான மாற்றுத் திறனாளிகளின் பட்டியலின்படி, முதல்வா் விழுப்புரம் வருகையின்போது, வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு மாற்றுத் திறனாளிகள் கலைந்து சென்றனா்.