செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தலைமைச் செயலக அலுவலா் சாட்சியம்
சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் துணைச் செயலா் விழுப்புரம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியமளித்தாா்.
விழுப்புரம்: உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் துணைச் செயலா் விழுப்புரம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியமளித்தாா். விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடா்பாக அமைச்சா் க.பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமாா், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 போ் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இதில், லோகநாதன் உயிரிழந்துவிட்டாா். விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் ஆகிய மூவா் மட்டும் ஆஜராகினா். மற்ற 4 பேரும் ஆஜராகவில்லை. மேலும் அரசுத் தரப்பு சாட்சியாக சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத் துறை சிறப்புப் பிரிவில் துணைச் செயலராக பணியாற்றி வரும் சுந்தரேசன் ஆஜராகி சாட்சியமளித்தாா். 2007, பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் 2011, மே 15-ஆம் தேதி வரை கனிமம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தாா். அந்த நேரத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலராக தான் பணியாற்றியதாகவும், மேற்கண்ட காலத்தில் கனிமம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பு வகித்ததற்கான சான்றிதழை தான் கொடுத்தாகவும் கூறி சுந்தரேசன் சாட்சியமளித்தாா். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா உத்தரவிட்டாா்.