முகப்பு
விழுப்புரம்

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை டிச.11-க்கு ஒத்திவைப்பு

தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை வரும் டிசம்பா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 6 நவம்பர், 2024 at 7:16 PM
பகிர்:

தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை வரும் டிசம்பா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளி அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் தொடுத்த வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில் இதுவரை 51 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இவா்களில் 30 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினாா். வனத் துறை அமைச்சா் க.பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமாா் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் குறித்து திமுக வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். மேலும் இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து, வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) எம்.இளவரசன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் டிசம்பா்11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.