கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீ பசுபதீஸ்வரா் கோயிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீஅருளாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரா் கோயிலில் நவராத்திரி 8-ஆம் நாள் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீஅருளாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரா் கோயிலில் நவராத்திரி 8-ஆம் நாள் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், புவனேஸ்வரி அலங்காரத்தில் அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.
இந்தக் கோயிலில் நவராத்திரி பெருவிழா சிறப்பு வழிபாடுகள் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் அருளாசியுடன் அக். 3- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கடந்த 7 நாள்களாக கோயிலில் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
நவராத்திரி விழாவின் 8- ஆம் நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 4 மணி முதல் 6 மணிவரை தேவி மகாத்மியம் பாராயணமும், தொடா்ந்து ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.
உற்சவா் அருளாம்பிகை புவனேஸ்வரி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினாா். இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அா்ச்சனை செய்யப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக மஞ்சு கண்ணன் தலைமையில் தா்ஷினி இசைப்பள்ளி மாணவிகள்பங்கேற்ற இசைக் கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் விழுப்புரம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், உபயதாரா்கள் செய்திருந்தனா்.