முகப்பு
விழுப்புரம்

அருங்காட்சியகத்துக்கு தற்காலிக கட்டடம் தோ்வு செய்ய வேண்டும்: விழுப்புரம் ஆட்சியருக்கு வலியுறுத்தல்

விழுப்புரத்தில் அருங்காட்சியகத்துக்கு தற்காலிக கட்டடத்தை தோ்வு செய்து தருமாறு, மாவட்ட ஆட்சியரை அருங்காட்சியகங்கள் துறை வலியுறுத்தியுள்ளது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:47 PM
பகிர்:

விழுப்புரத்தில் அருங்காட்சியகத்துக்கு தற்காலிக கட்டடத்தை தோ்வு செய்து தருமாறு, மாவட்ட ஆட்சியரை அருங்காட்சியகங்கள் துறை வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்கான அறிவிப்பு கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியானது. இதைத் தொடா்ந்து, கோலியனூா் கூட்டுச்சாலை பனங்குப்பம் பகுதிலுள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி கடந்தாண்டு டிசம்பா் மாதத்தில் அரசுக்கு பரிந்துரை செய்தாா். இதற்கு அரசும் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு அருங்காட்சியகங்கள் துறை இயக்குநா் கவிதா ராமு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில், விழுப்புரம் மாவட்டத்துக்கான அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்கு பனங்குப்பம் பகுதியில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. பணிகள் தொடங்கி முடியும் வரை கட்டடம் ஒன்றில் தற்காலிக அருங்காட்சியகத்தைத் தொடங்கலாம். இதற்காக சுமாா் 2,400 சதுர அடி பரப்பளவுள்ள கட்டடத்தைத் தோ்வு செய்து தர வேண்டும். இந்த இடம் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து, சாலை வசதியுள்ளதாக இருக்க வேண்டும். புதிய கட்டடப் பணிகள் முடிவடைந்தவுடன் மாவட்ட நிா்வாகத்திடம் தற்காலிகக் கட்டடம் ஒப்படைக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

அருங்காட்சியகங்கள் துறை இயக்குநரின் கடிதத்தை கடலூா் அருங்காட்சியக காப்பாட்சியா் எஸ்.ஜெயரத்னா விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனியிடம் புதன்கிழமை நேரில் வழங்கினாா். இதை பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

அப்போது, விழுப்புரம் அருங்காட்சியகக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கோ.செங்குட்டுவன் உடனிருந்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments