முகப்பு
தினமணி கதிர்

வரலாறு முக்கியம்...

'ஓர் இனத்துக்கு வரலாறு என்பது முக்கியம். மாவட்டம்தோறும் அருங்காட்சியகங்களை அமைத்து, அந்தந்த மாவட்டங்களில் கிடைக்கும் பழங்கால கல்வெட்டுகள், சிலைகள், செப்புப் பட்டயங்களை அதில் பராமரிக்கலாம்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:35 PM
பகிர்:

'ஓர் இனத்துக்கு வரலாறு என்பது முக்கியம். மாவட்டம்தோறும் அருங்காட்சியகங்களை அமைத்து, அந்தந்த மாவட்டங்களில் கிடைக்கும் பழங்கால கல்வெட்டுகள், சிலைகள், செப்புப் பட்டயங்களை அதில் பராமரிக்கலாம். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் இன்னமும் கூட பல இடங்களில் கேட்பாரற்று, பாதுகாப்பற்றுள்ளன. இவற்றை மீட்டெடுத்துப் பாதுகாக்கவேண்டும். அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதை அருங்காட்சியகத்தால் மட்டுமே செய்யமுடியும்' என்கிறார் சரித்திர ஆர்வலர் செங்குட்டுவன்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள், தாழிகள், கடவுள் சிலைகள், கல்வெட்டுகளைக் கண்டுபிடித்து அரசுக்கு தகவல் அளித்தவர் செங்குட்டுவன். விழுப்புரத்தில் ஓர் அருங்காட்சியகம் உருவாவதில் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ள அவரிடம் பேசியபோது:

'1991, 92-ஆம் ஆண்டுகளில் விழுப்புரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளராக இருந்த தமிழறிஞர் கொடுமுடி ச.சண்முகன், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் அக்கறையுடன் செயல்பட்டார். பல்வேறு இடங்களில் இருந்த கல்வெட்டுகள், சிற்பங்களைச் சேகரித்து விழுப்புரம், திண்டிவனம் பொதுப்பணித் துறை அலுவலக வளாகங்களில் திறந்தவெளி அருங்காட்சியகங்களை அமைத்தார். அவரோடு நெருங்கிப் பழகிய எனக்கும் இதுகுறித்த ஈடுபாடு ஏற்பட்டது.

1993-இல் விழுப்புரம் வருவாய் மாவட்டமாக உருவானவுடன், இந்த மாவட்டத்துக்கு என்று தனித்த அருங்காட்சியகம் அமைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். 2005-இல் விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கா.பாலச்சந்திரன் இதில் உறுதியுடனும் செயல்பட்டார். ஆனாலும், திட்டம் நிறைவேறவில்லை. மனம் தளராமல் முயற்சியை முன்னெடுத்தேன்.

2018-இல் விழுப்புரம் மாவட்டம் 25- ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தபோது, கையெழுத்து இயக்கத்தை நடத்தி, அரசுக்கு அனுப்பி வைத்தேன். அப்போதைய அமைச்சர்கள் சி.வி.சண்முகம், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டோரையும், அரசுத் துறையினரையும் சந்தித்து, மனுக்களை அளித்தேன். தெருமுனைக் கூட்டங்களை நடத்தினோம். எழுத்தாளர் கண்மணி குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டோம். இதற்கிடையில் 'அருங்காட்சியகம் அவசியமும் அவசரமும்' எனும் நூலையும் எழுதி வெளியிட்டேன்.

2021-இல் அமைச்சர் தங்கம் தென்னரசை சந்தித்து, விழுப்புரம் மாவட்ட சுற்றுவட்டாரத்தில் நாங்கள் கண்டெடுத்த சிலைகள், தாழிகள், கல்வெட்டுகள் குறித்து விளக்கினோம். அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தையும் எடுத்துரைத்தோம். 2022-இல் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனும் அறிவிப்பு வெளியானது. தற்போது அதற்கான பலனும் கிடைத்தது.

விழுப்புரம் அருகே புதுச்சேரி சாலையில் பனங்குப்பம் எனும் இடத்தில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் ரூ.6.62 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 4-இல் அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகளும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது.

அங்கே இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள், கல்வெட்டுகள், தாழிகள், செப்பு பட்டயங்கள் காட்சிப்படுத்தப்படும். விழுப்புரம் மாவட்டத்தின் வரலாற்றை இந்தத் தலைமுறையும், இனி வரும் தலைமுறையும் அறிய உதவும்.

இந்த அருங்காட்சியம் அமைய என்னுடன் இணைந்து, எனக்குத் தோள் கொடுத்து உதவியோர், இதற்காக முன்னெடுத்த விழுப்புரம் அருங்காட்சியகம் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அமைப்பினர் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்புடன் இந்த லட்சியம் நிறைவேறியுள்ளது. இடத்தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் மிகவும் கவனம் செலுத்திய முன்னாள் ஆட்சியர்கள் த.மோகன், சி.பழனி ஆகியோரை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்' என்கிறார் செங்குட்டுவன்.

முழு கட்டுரையைப் படிக்க →