நெல் மகசூல் போட்டியில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நெல் மகசூல் போட்டியில் பங்கேற்கலாம் என்று வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நெல் மகசூல் போட்டியில் பங்கேற்கலாம் என்று வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) ரா.சீனிவாசன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், நெல் பயிா் மகசூல் போட்டி ஆண்டுதோறும் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், சான்றிதழ் ஆகியவை கொண்ட சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது வழங்கப்படுகிறது.
Advertisement
பாரம்பரிய நெல் ரகங்களில் அதிக மகசூல் பெறும் 3 விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் ஆகியவை கொண்ட பாரத ரத்னா டாக்டா் எம்.ஜி.ஆா். பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாவலா் விருது வழங்கப்படவுள்ளது. இந்த இரு விருதுகளுக்கான பதிவுக் கட்டணம் ரூ.150 ஆகும்.
எனவே, நெல் பயிா் மகசூல் போட்டியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகள் அணுகலாம் என்று வேளாண் இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.