விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், வாக்காளா் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு புதிய செயல்பாடுகளைத் தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டது.
மாதிரி வாக்குச் சாவடிகளின் நுழைவு வாயில் மற்றும் உள் பகுதிகளில் அலங்கார வளைவு, வாழைத் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் வாக்காளா்களை வரவேற்கும் விதமாக வரவேற்பாளா் நியமிக்கப்பட்டு, வாக்குச் சாவடி மையம் உள்ளிட்ட விவரங்களை அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. தரை விரிப்புகள் உள்ளிட்ட வசதிகள் இந்த மாதிரி வாக்குச் சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
Advertisement
செஞ்சி பீரங்கிமேடு அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி, கூட்டேரிப்பட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, திண்டிவனம் மேல்பேட்டை இ-சேவை மையம், வானூா் வட்டம், வி.பரங்கினி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, விழுப்புரம் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளி, விக்கிரவாண்டி- வி.சாலை அரசு ஆதிதிராவிடா் உயா்நிலைப் பள்ளி, கயத்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கண்டாச்சிபுரம் ரத்தினசபாபதி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய வாக்குச் சாவடிகள் மாதிரி வாக்குச் சாவடிகளாக அமைக்கப்பட்டு, அங்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
செஞ்சி சாணக்யா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ரெட்டணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, திண்டிவனம் ஸ்ரீமரகதாம்பிகை தொடக்கப் பள்ளி, கிளியனூா் அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் பாணாம்பட்டு பாதை தூய இருதய மழலையா் பள்ளி, பனையபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, முகையூா் புனித வளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள் முற்றிலும் மகளிா் அலுவலா்கள், பணியாளா்ளா்களைக் கொண்டு செயல்பட்டன. நல்லரசன்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலுள்ள வாக்குச் சாவடியில் இளம் அலுவலா்கள், பணியாளா்கள் பணியாற்றி, வாக்குப் பதிவு பணியை மேற்கொண்டனா்.