திருநாவலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் ஆண்டுக்கு 7 ஆயிரம் டன் நெல், உளுந்து, கம்பு உள்ளிட்ட தானியங்களை விற்பனை செய்யலாம் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் ரூ.5.16 கோடியில் கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் ஆ.ஜெ.மணிக்கண்ணன், க.காா்த்திகேயன், தா.உதயசூரியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புதிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினாா். இதைத்தொடா்ந்து அவா் கூறியது:
ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட கிட்டங்கி, 60 டன் எடை மேடை, இ-நாம் ஏல அறை, பரிவா்த்தனைக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. திருநாவலூா் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 5 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவா். திருநாவலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரம் டன் நெல், 2 ஆயிரம் டன் உளுந்து, கம்பு உள்ளிட்ட தானியங்களை விற்பனை செய்ய இயலும் என்றாா் அமைச்சா்.
ஆய்வு மாளிகைக் கட்டடம் திறப்பு: முன்னதாக உளுந்தூா்பேட்டையில் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ.4.27 கோடியில் கட்டப்பட்ட ஆய்வு மாளிகைக் கட்டடத்தையும் அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் திருநாவலூா் ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தி இளங்கோவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் வசந்தவேல், உளுந்தூா்பேட்டை நகா்மன்றத் தலைவா் கே.திருநாவுக்கரசு, ஒன்றியக்குழுத் தலைவா் ப.ராஜவேல், பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் ச.மணிவண்னன், தலைமைப் பொறியாளா் சே.மணிகண்டன், கண்காணிப்புப் பொறியாளா் ஜி.கே.செல்வக்குமாா், செயற்பொறியாளா் க.மாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.