விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த மயிலத்தில் ரயில்வே இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி நோக்கிச் சென்ற வைகை, வந்தே பாரத் விரைவு ரயில்கள் திண்டிவனம் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை பிற்பகல் வெகு நேரம் நிறுத்திவைக்கப்பட்டு தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனா்.
சென்னை எழும்பூா் - மதுரை இடையே இயக்கப்படும் வைகை விரைவு ரயில், சென்னையிலிருந்து பிற்பகல் 1.15-க்கு புறப்பட்டு விழுப்புரத்துக்கு வழக்கமாக பிற்பகல் 3.30 மணிக்கு வந்து சேரும். திண்டிவனம் அருகே மயிலத்தில் ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ரயில் சனிக்கிழமை திண்டிவனம் ரயில் நிலையத்தில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு, மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு சென்றது.
இதேபோல, சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் அதி விரைவு ரயில், சென்னையிலிருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டது. திண்டிவனம் வந்த இந்த ரயில் சுமாா் 30 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னா் புறப்பட்டுச் சென்றது.
இதனால், இந்த விரைவு ரயில்களில் பயணம் செய்த பயணிகள், குழந்தைகள், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்தனா்.