முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் ஆறு வருடங்களாக அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்சமயம் விசாவை அரசாங்கம் புதுப்பித்தால்தான், தொடர்ந்து அங்கேயே தங்கி வேலை செய்ய முடியும். அது நடக்குமா?

என் மகன் ஆறு வருடங்களாக அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்சமயம் விசாவை அரசாங்கம் புதுப்பித்தால்தான், தொடர்ந்து அங்கேயே தங்கி வேலை செய்ய முடியும். அது நடக்குமா?

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

என் மகன் ஆறு வருடங்களாக அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்சமயம் விசாவை அரசாங்கம் புதுப்பித்தால்தான், தொடர்ந்து அங்கேயே தங்கி வேலை செய்ய முடியும். அது நடக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? நிரந்தரமாக தங்குவதற்கு முயற்சி எடுக்கிறார். அதுவும் வெற்றி அடையுமா? 

-வாசகர், திருச்சி. 

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம். லக்னாதிபதி, அஷ்டமாதிபதி சுக்கிர பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நட்பு வீடான மகர ராசியை அடைகிறார். 

Advertisement

அஷ்டமாதிபதி தன் வீட்டைப் பார்வை செய்வதால் தீர்க்காயுள் உண்டு. எட்டாம் வீட்டிற்கு ஒரு விசேடமான பலம் அமையுமானால், தர்ம ஸ்தாபனங்களை அமைக்கும் தகுதியும், மரணத்தை வெல்லுகின்ற ஓர் ஆற்றலும், பற்றற்ற தன்மையுடன் மற்றையோருக்காகத் தன்னை அர்ப்பணம் செய்யும் மனப்பான்மையும் வரக்கூடும். 

லக்னத்தில் தொழில் ஸ்தானாதிபதி சந்திர பகவான் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் உச்ச வீடான ரிஷப ராசியில் அதாவது லக்னாதிபதியின் மற்றொரு வீட்டில் அமர்கிறார். இதனால் லக்னாதிபதியின் இரண்டு வீடுகளும் சிறப்பான பலத்தை அடைகின்றன என்று கூறினால் மிகையாகாது. 

அதோடு லக்னாதிபதி அமர்ந்திருக்கும் இரண்டாம் வீட்டிற்கு இருபுறமும் தர்மகர்மாதிபதிகளான புத, சந்திர பகவான்கள் இருப்பது "சுப கர்த்தாரி யோகம்' ஆகும். 

லக்னாதிபதி சுப கிரகமாகி, சுப கிரகங்களால் சூழப்பட்டு வலிமை பெற்றிருந்தால், அப்படிப்பட்டவருக்கு இயல்பாகவே ஆத்ம பலம் உண்டு. சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான, ராஜயோக காரகருமான (கேந்திரம், திரிகோண வீடுகளுக்கு அதிபதியாவதால்) சனி பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் நட்பு ராசியான கன்னி ராசியை அடைகிறார். 

3, 6, 11-ஆம் வீடுகளில் சனி பகவான் பலம் பெறுவார் என்றும், அதிலும் சனி பகவான் பதினொன்றாம் வீட்டில் இருப்பது சிறப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது. 

பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான், தைரிய, முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்), வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். 

ஒன்பதாமதிபதி ஒன்பதாம் வீட்டைப் பார்வை செய்வது சிறப்பு. ஒன்பதாம் வீடும், ஒன்பதாமதிபதியும் வலுத்திருந்தால் ஜாதகரால் தந்தைக்கும், தந்தையால் ஜாதகருக்கும் பரஸ்பரம் நன்மைகள் உண்டாகும். 

பூர்வீகச் சொத்துக்கள் வளர்ச்சியடையும். தர்ம வீடாகையால், கொடை குணம் மட்டுமன்றி மத பக்தி, தெய்வ பக்தி, நீதி வழி நிற்றல், சத்தியக் கோட்பாடு, நேர்மையில் நாட்டம், நேரான நடத்தை ஆகியவையும் மேன்மையுறும். 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்குமதிபதியான செவ்வாய் பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து, நவாம்சத்தில் மீன ராசியை அடைந்து, பஞ்சமஹா புருஷ யோகங்களிலொன்றான ருசக யோகத்தைப் பெறுகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்குமதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து,ஹம்ச யோகத்தையும் பெற்று, நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். 

குரு பகவானின் ஐந்தாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் லக்னாதிபதியான சுக்கிர பகவானின் மீதும், ஏழாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும், அங்கு உச்சம் பெற்றிருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவான் மற்றும் லாபாதிபதியான சூரிய (சிவராஜயோகம்) பகவான்களின் மீதும் படிகிறது. குரு பகவானின் ஒன்பதாம் பார்வை ஆறாம் வீடான தன் ஆட்சி வீட்டின் மீதும் படிகிறது. 

லாபாதிபதியான சூரிய பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுய சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். கேது பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் குரு பகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். 

ராகு பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 
தற்சமயம் புத மஹா தசையில் குரு பகவானின் புக்தி நடப்பதால் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அவருடைய தற்காலிக விசா புதுப்பிக்கப்பட்டு விடும். 2025 -ஆம் ஆண்டுக்குள் நிரந்தரமாக வசிக்கக் கூடிய உரிமையும் கிடைத்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணா மூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments