முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

 நான் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வருகிறேன். தற்சமயம் சனி தசை நடக்கிறது. தொழிலை விரிவுபடுத்தலாமா..? எட்டாமதிபதி தசை வேலை செய்யுமா? பாவாத் பாவம் அடிப்படையில் குறை குறையுமா? ஆயுள் ஆரோக்கியம் பற்றியும் கூறவும்...

உங்களுக்கு கடக லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் நீச்சம் அடைகி

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

விரிவாக்கம் வேண்டாம்!
 நான் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வருகிறேன். தற்சமயம் சனி தசை நடக்கிறது. தொழிலை விரிவுபடுத்தலாமா..? எட்டாமதிபதி தசை வேலை செய்யுமா? பாவாத் பாவம் அடிப்படையில் குறை குறையுமா? ஆயுள் ஆரோக்கியம் பற்றியும் கூறவும்...
 பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.
 உங்களுக்கு கடக லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் நீச்சம் அடைகிறார். லக்னாதிபதி முழுமையான பலம் பெறவில்லை என்று கூறவேண்டும்.
 பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
 ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் மூன்றாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
 தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (உத்திர நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானத்தில் தன ஸ்தானாதிபதி தன காரகருடன் இணைந்திருப்பது சிறப்பு. சிறிய முயற்சிகள் பெரிய அளவுக்கு வெற்றியைக் கொடுக்கும். தொட்டது துலங்கும். வருமானம் ஊற்று போல் பெருகும்.
 சூரிய, குரு பகவான்களுடன் செவ்வாய் பகவான் இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் மற்றும் குரு மங்கள யோகம் ஆகிய உன்னதமான யோகங்களையும் கொடுக்கிறார்.
 பொதுவாக தர்மகர்மாதிபதி யோகம் உள்ளவர்களுக்கு சமுதாயத் தொண்டு புரிய வாய்ப்பு தேடி வரும். செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சி உண்டாகும்.
 குருமங்கள யோகத்தால் நில புலன்களால் லாபம் உண்டாகும். நிலத்தில் செய்த முதலீடு வீண்போகாது. குருபகவான் தன காரகராகவும் ஆவதால் கொடுக்கல் வாங்கல், பொருளாதாரம் போன்ற துறைகளில் ஈடுபட்டு வெற்றிக்கொடி நாட்டுவார்கள். குரு பகவானுக்கு பொன்னன் என்கிற பெயரும் உண்டு.
 அதனால் தங்கத்தில் செய்யும் முதலீடும் லாபத்தைத் தரும். இந்த சூரிய, செவ்வாய், குரு பகவான்களின் சேர்க்கை மட்டுமே வாழ்க்கையில் உன்னதமான இடத்தைக் கொடுக்கும் என்று கூறவேண்டும்.
 தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோண வீடான கன்னி ராசியை அடைகிறார்.
 விரயாதிபதி தன ஸ்தானத்தில் பலம் பெற்றிருந்தால் தன விரயங்கள் தவிர்க்கப்படும். குரு பகவானின் ஐந்தாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானமான தன் ஆட்சி வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் படிகிறது.
 சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் சுக ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்று, பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைப் பெற்று ராகு பகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் உச்ச வீடான மீன ராசியை அடைகிறார்.
 அஷ்டலட்சுமி யோகத்திற்கு காரகம் வகிப்பவரும், குரு பகவானுக்கு சம அந்தஸ்தில் இருப்பவரும், அரசாங்கத்தில் உயர் பதவிகளை உண்டாக்கிக் கொடுப்பவரும், வண்டி, வாகனம், பிராணிகளுக்கும் காரகம் வகிப்பவரும், போக, பாக்கிய காரகருமான சுக்கிர பகவான் ராசி, நவாம்சம் இரண்டிலும் பலம் பெற்றிருப்பது அரிதான அமைப்பாகும்.
 களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அஷ்டம, ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சுய சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார்.
 ராகுபகவான் சுக ஸ்தானத்தில் சுய சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். கேது பகவான் தொழில் ஸ்தானத்தில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார்.
 சனி பகவான் அஷ்டமாதிபதியாக அமைந்து தன் தசையை நடத்துவதால் நன்மையே விளையும். களத்திர நட்பு ஸ்தானத்திற்கு லாப ஸ்தானத்திலும், அஷ்டம ஸ்தானத்திற்கு தொழில் ஸ்தானத்திலும் பாவாத் பாவ அடிப்படையில் அமர்ந்திருப்பதாலும் அவர் நன்மையே செய்யக் கடமைப்பட்டவர்.
 அதே நேரம் படிப்படியாகத்தான் வளர்ச்சி உண்டாகும். அதனால் உங்கள் தொழிலை விரிவுபடுத்த வேண்டாம்.
 தற்சமயம் செய்து வரும் தொழிலே போதுமானது. மற்றபடி தீர்க்காயுள் உண்டு. ஆரோக்கியம், எதிர்காலம் வளமாக இருக்கும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments