முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு பத்து வருடங்களாக தொழில் எதுவுமில்லை. நெசவுத் தொழில் செய்யலாமா ? அதில் ஏற்றுமதிக்கும் வாய்ப்புண்டா? பிளாஸ்டிக் துகள்கள் விற்கும் ஏஜென்ஸி வைக்கலாமா? வேறு என்ன செய்யலாம் ? என் மகன் வெளிநாட்டுக் குடிமகனாவாரா?

 உங்களுக்கு கடக லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம் 3-ஆம் பாதம். கடக லக்னத்திற்கு லக்னாதிபதி சந்திர பகவான் சுபாவ சுப கிரகமாக ஆவதால் கேந்திராதிபத்ய தோஷத்திற்கு உள்ளாகுவார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

எந்தத் தொழிலும் வேண்டாம்!
 எனக்கு பத்து வருடங்களாக தொழில் எதுவுமில்லை. நெசவுத் தொழில் செய்யலாமா ? அதில் ஏற்றுமதிக்கும் வாய்ப்புண்டா? பிளாஸ்டிக் துகள்கள் விற்கும் ஏஜென்ஸி வைக்கலாமா? வேறு என்ன செய்யலாம் ? என் மகன் வெளிநாட்டுக் குடிமகனாவாரா?
 -வாசகர், சேலம்.
 உங்களுக்கு கடக லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம் 3-ஆம் பாதம். கடக லக்னத்திற்கு லக்னாதிபதி சந்திர பகவான் சுபாவ சுப கிரகமாக ஆவதால் கேந்திராதிபத்ய தோஷத்திற்கு உள்ளாகுவார்.
 அவர் எட்டாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.
 பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பன்னிரண்டாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
 கடக லக்னத்திற்கு ஒரு திருகோண ஸ்தானத்திற்கும், ஒரு கேந்திர ஸ்தானத்திற்கும் செவ்வாய் பகவான் அதிபதியாக வருவதால் "யோக காரகர்' என்றழைக்கப்படுகிறார்.
 ருணம் ( கடன் ) ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் ஐந்தாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
 ஆறாம் வீட்டிற்கு பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் குரு பகவான் பெரியதாக கடன், வியாதி, விரோதங்களைக் கொடுப்பதில்லை.
 தனாதிபதி சூரிய பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம் ) திக் பலம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார்.
 தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுய சாரத்தில் (ரேவதி நட்சத்திரம் ) நீச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார்.
 நீச்சனேறிய ராசி நாதன் குரு பகவான் சந்திர கேந்திரத்தில் (கஜகேசரி யோகமும் கூட) அமர்ந்திருப்பதால் புத பகவானுக்கு நீச்ச பங்க ராஜ யோகம் உண்டாகிறது.
 சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு.
 சர லக்னங்களுக்கு பதினொன்றாம் வீடு பாதக ஸ்தானமாகவும் வருவதால் அவர் ஆட்சி பெற்றிருப்பதால் பாதகம் ஏதும் உண்டாகாது.
 சுக்கிர பகவான் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருக சீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியில் நீச்சமடைகிறார். பாதகாதிபதி நவாம் சத்தில் நீச்சமடைந்திருப்பதால் சுக்கிர பகவானின் காரகத்துவங்கள் எதுவும் பாதிக்கப்படாமல் சுபமாக அனுபவிக்க நேரும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் ஆறாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம் ) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
 குரு பகவானின் ஐந்தாம் பார்வை ஒன்பதாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் புத, கேது பகவான்களின் மீதும், ஏழாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை லக்னத்தின் மீதும் படிகிறது.
 ராகு பகவான் மூன்றாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். கேது பகவான் ஒன்பதாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
 நெசவுத் தொழில் சுக்கிர பகவானின் ஆதிக்கத்தில் வருகிறது. அதே நேரம் தொழில் ஸ்தானாதிபதிக்கு ஏற்ற வகை தொழில் அல்ல.
 மேலும் தொழில் ஸ்தானதிபதியை அவரின் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகமான சனி பகவான் பார்வை செய்கிறார்.
 பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட தொழிலும் சுக்கிர பகவானுக்கு உரியதே. தசாநாதராகிய சுக்கிர பகவான் நவாம்சத்தில் நீச்சம். அவரை பரஸ்பரம் விரோதம் பெற்ற குரு பகவான் பார்வை செய்கிறார். அதனால் சுக்கிர பகவானின் தசையில் சுய புக்தி முடிந்தவுடன் தொழில் கை விட்டுப் போயிற்று. இதுவும் நன்மைக்கே.
 தொடர்ந்து தொழில் செய்து வந்திருந்தால், புத மஹா தசை வரையில் சம்பாதித்த அனைத்துச் சம்பாத்தியங்களும் விரயமாகி இருக்கக் கூடும்.
 குரு பகவானின் சுப பார்வையால் காக்கப்பட்டீர்கள். இன்னும் ஆறு ஆண்டுகள் வரை சுக்கிர மஹா தசை நடக்கும். அதுவரை எந்தத் தொழிலும் முதல் போட்டுச் செய்யக் கூடாது.
 சூரிய மஹா தசை தொடங்கியவுடன் உணவு, மளிகை சம்பந்தப்பட்ட தொழில் அமையும். உங்கள் மகன் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று விடுவார். மற்றபடி உங்கள் குடும்ப எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments