திசைகாட்டிகள்: எழுத்தாளர் ஜெயபாஸ்கரன்
குழந்தைகளுக்கான நூலகச் சுற்றுலா என்ற அவசியத் தேவைகூட கனவாகவே உள்ளது. மேலும் தற்போது சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில ஆசானாக உருவெடுத்துள்ளன.
நிகழ்காலத் தமிழகத்தின் வளரிளம் பருவத்தினர் தமிழ் இலக்கியத்தைப் படிப்பதில் இருந்தும் தமிழைப் பேசுவதில் இருந்தும் வெகு தூரம் விலகிச்சென்றுவிட்டதாகப் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவது பொதுவான கருத்தாகிவிட்டது.
அதில் ஓரளவு உண்மை இருந்தாலும்கூட, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதைக் களைவதற்கு யாரும் முன்வருவதில்லை.
தற்போது தமிழ் மொழியைப் பயிற்றுவிப்போர் வலிமை குன்றிய நான்காம் நிலைக் குழுவினராகவே உள்ளனர். மேலும், தமிழகத்தில் மாணவர்களுக்கு பாதிக்குப் பாதி ஆங்கில மொழிதான் பயிற்று மொழியாக உள்ளது.
பிற மொழிக்கு அவர்களைப் பழக்கப்படுத்திவிட்டு அவர்களிடம் தமிழை எதிர்பார்ப்பது நகை முரணின்றி வேறென்ன?.
குழந்தைகளுக்கான நூலகச் சுற்றுலா என்ற அவசியத் தேவைகூட கனவாகவே உள்ளது. மேலும் தற்போது சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில ஆசானாக உருவெடுத்துள்ளன. அவை நமது குழந்தைகளை ஆங்கில மோகம் பிடித்தவர்களாக்கியுள்ளன.
நிகழாண்டில் தமிழ் படித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை வளர்க்கும் பயிற்சிக் கையேடு வழிகாட்டல் நூல் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற புதிய முயற்சிகளால் இளந்தலைமுறையினர் தமிழின் மீது ஈர்ப்பு கொள்வதற்கு வழிவகுக்கும்.
இன்றைய இளைஞர்கள் தமிழ் இலக்கியத்திலிருந்து விலகி நிற்பதற்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல என்பதை நாம் உணரவேண்டும். அதற்கு படித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை வளர்க்கும் திட்டம் போல தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் திட்டங்களை தலைநகராம் சென்னையைத் தாண்டியும் செயல்படுத்த வேண்டும் என்பதும் முக்கியமாகும்.