கோவையைச் சேர்ந்த ரீபோஸ் மேட்ரசஸ் நிறுவனம், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலும், உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியதுமான ஆர்கானிக் மெத்தையைத் தயாரித்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.பாலசந்தர் கோவையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு 2012-இல் தொடங்கப்பட்ட ரீபோஸ் மேட்ரசஸ் நிறுவனம் ஆடம்பர மெத்தைகள் விற்பனையில் 10 சதவீத இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த நிதியாண்டில் எங்களது வர்த்தகம் ரூ.52 கோடியாக இருந்தது. இதை 2016-17-இல் ரூ.85 கோடியாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.
இந்திய சந்தையில் தென்னை நார் மெத்தைகள், போம் மெத்தைகளைக் காட்டிலும் ஸ்பிரிங் வகை மெத்தைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஸ்பிரிங் மெத்தைகளின் விற்பனை ஆண்டுக்கு சுமார் 30% அதிகரிக்கிறது. இந்த வகை மெத்தைகள் ஆண்டுக்கு சுமார் ரூ.1,800 கோடிக்கு விற்பனையாகின்றன.
புதுமணத் தம்பதிகளுக்காக ரொமான்டோ என்ற ரப்பரால் தயாரிக்கப்பட்ட மெத்தையைத் தயாரித்துள்ளோம். அதேபோல் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மூங்கில் இழை, நார், கற்றாழை, ரசாயன உரமிடாமல் இயற்கையான முறையில் விளைந்த பருத்தியால் தயாரிக்கப்பட்ட மெத்தைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்த வகை மெத்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியையும், உடலுக்கு குளிர்ச்சியையும் தரக் கூடியவை. அதேபோல், இரவு நேரங்களில் செல்லிடப்பேசியில் பாடல்களை கேட்டுக் கொண்டே உறங்குபவர்களுக்காக ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்ட தலையணையைத் தயாரித்துள்ளோம். இதனால் பக்கத்தில் உறங்குபவருக்கு இடையூறு இல்லாமல் பாடல் கேட்டபடியே உறங்க முடியும்.
இருவர் உறங்கக் கூடிய மெத்தைகள் சுமார் ரூ.15,000 முதல் ரூ.1.80 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது என்றார் அவர். தலைமை விற்பனை அலுவலர் வி.பாலாஜி, செயல் அலுவலர் ராம்நாத் பட் ஆகியோர் உடனிருந்தனர்.