முதலீட்டார்களை ஈர்க்கும் அளவிலான பெரிய நிகழ்வுகள் எதுவும் இல்லாததால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தன.
வட கொரியா நிகழ்த்திய ஹைட்ரஜன் குண்டு சோதனையால் உலக அளவில் ஏற்பட்டுள்ள பதற்றம், நிறுவனங்களின் வருவாய் ஈட்டலில் காணப்படும் மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக அந்நிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து கணிசமான முதலீட்டைத் திரும்பப் பெற்றன.
அதேசமயம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கியது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்ட நிகழ்வுகள் பங்குச் சந்தைகள் சரிவிருந்து தப்ப முக்கிய காரணிகளாக இருந்தன.
பொறியியல் சாதனங்கள் துறை நிறுவனப் பங்குகளின் விலை அதிகபட்சமாக 1.88 சதவீதம் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து, வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள்கள், வங்கி துறை பங்குகளுக்கும் முதலீட்டாளர்களிடையே வரவேற்பு இருந்தது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், எல் & டி பங்கின் விலை 4.07 சதவீதம் அதிகரித்து ரூ.1,172.30-ஆனது. மருந்து துறையைச் சேர்ந்த பயோகான் நிறுவனப் பங்கின் விலை 2.16 சதவீதம் அதிகரித்தது. பார்தி ஏர்டெல் பங்கின் விலை 1.64 சதவீதம் உயர்ந்து ரூ.404-ஆக இருந்தது.
இவை தவிர, கோட்டக் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி, மாருதி சுஸுகி, டிசிஎஸ், விப்ரோ மற்றும் ஏஷியன் பெயிண்ட் நிறுவனப் பங்குகளின் விலை 1.22 சதவீதம் வரை அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 24 புள்ளிகள் உயர்ந்து 31,687 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 4 புள்ளிகள் உயர்ந்து 9,934 புள்ளிகளாக நிலைத்தது.
இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் ரூ564 கோடி மதிப்பிலான பங்குகளை விற்ற நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.245.32 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.