தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி நான்காம் காலாண்டில் ரூ.4,799.3 கோடி நிகர லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற 2017-18 நிதி ஆண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் வருவாய் ரூ.25,549.7 கோடியாக இருந்தது. முந்தைய 2016-17 நிதி ஆண்டில் ஈட்டிய வருவாய் ரூ.21,560.7 கோடியுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகமாகும்.
வரி செலவினங்களுக்கு ரூ.2,495.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும், அந்த காலாண்டில் வங்கி ரூ.4,799.3 கோடி நிகர லாபம் ஈட்டியது. முந்தைய நிதி ஆண்டில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடும்போது இது 20.3 சதவீதம் அதிகமாகும்.
சென்ற முழு நிதி ஆண்டில் வங்கியின் நிகர லாபம் 21.4 சதவீதம் அதிகரித்து ரூ.18,510 கோடியாக இருந்தது. வழங்கப்பட்ட கடன்கள் ரூ.5,85,481 கோடியிலிருந்து 19.6 சதவீதம் உயர்ந்து ரூ.7,00,034 கோடியானது. மொத்த வாராக் கடன் விகிதம் 1.05 சதவீதத்திலிருந்து அதிகரித்து 1.30 சதவீதமாகியுள்ளது. நிகர வாராக் கடன் விகிதம் 0.4 சதவீதமாக இருந்தது.
சென்ற நிதி ஆண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.13 ஈவுத்தொகை வழங்க வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், அடுத்த 12 மாத காலத்தில் தனிப்பட்ட ஒதுக்கீடுகளின் அடிப்படையில் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.50,000 கோடி திரட்டிக் கொள்ளவும் அந்தக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ஹெச்டிஎஃப்சி வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.