இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.9 சதவீதமாக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது: பெருமளவு ஏற்பட்ட வர்த்தக பற்றாக்குறையின் காரணமாக நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் இது 1.1 சதவீதமாக மட்டுமே காணப்பட்டது.
அந்நியச் செலவாணி வெளியேற்றம் மற்றும் வரத்து ஆகியவற்றுக்கிடையிலான வித்தியாசம் நடப்பு கணக்கு பற்றாக்குறையாக கருதப்படுகிறது. அந்த வகையில், செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது 1,910 கோடி டாலராக இருந்தது.
இது, முந்தைய ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 1,590 கோடி டாலராகவும் (ஜிடிபியில் 2.4 சதவீதம்), 2017-18 இரண்டாவது காலாண்டில் 690 கோடி டாலராகவும் (ஜிடிபியில் 1.1 சதவீதம்) இருந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.