அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைப்பது தொடர்பாக அந்நிறுவனத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைப்பது குறித்து ஏற்கெனவே அந்நிறுவனத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இங்கு ஆலை அமைப்பதற்கு அந்நிறுவனம் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் ஸ்விட்சர்லாந்தில் உள்ள லாவோஸ் நகரில் நடைபெறும் கூட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் உயரதிகாரிகளை சந்தித்துப் பேசவுள்ளேன். அவர்கள் ஒத்துக்கொள்ளும்பட்சத்தில் அவர்கள் இந்தியாவில் ஆலை அமைப்பது விரைவில் சாத்தியமாகும்.
ஆப்பிள் நிறுவனம் கோரிய வரி மற்றும் இதர சலுகைகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்படலாம். ஆப்பிள் இந்தியாவில் ஆலை அமைப்பதற்கு இது சரியான நேரம். அவர்களை வரவேற்க மிகவும் ஆவலாக உள்ளோம் என்றார் அவர்.