தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ஈட்டிய லாபம் 70 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபிக்கு செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2018-19 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கி ஈட்டிய மொத்த வருவாய் ரூ.1,702.65 கோடியாக இருந்தது. 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.1,647.17 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.
அதேசமயம், வாராக் கடன்களுக்கு அதிகமான தொகை ஒதுக்கப்பட்டதையடுத்து கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் வங்கியின் லாபம் 70 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி நிகர லாபம் ரூ.71.49 கோடியிலிருந்து சரிந்து ரூ.21.20 கோடியானது. மொத்த வாராக் கடன் விகிதம் 5.94 சதவீதத்திலிருந்து அதிகரித்து 8.49 சதவீதமானது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.2,663.32 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.4,055.73 கோடியானது.
நிகர அளவிலான வாராக் கடன் விகிதம் 3.88 சதவீதத்திலிருந்து (ரூ.1,698.92 கோடி) அதிகரித்து 4.99 சதவீதம் (ரூ.2,295.60 கோடி) ஆனது என கரூர் வைஸ்யா வங்கி தெரிவித்துள்ளது.