ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.3,050 கோடி அபராதம் விதிக்கும் முடிவை டெலிகாம் கம்யூனிகேஷன்ஸ் என்றழைக்கப்பட்ட டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (டிசிசி) ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சந்தைக்கு புதிய வரவான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு இண்டர்கனெக்டிவிட்டி எனப்படும் உள்இணைப்பு வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அந்த நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.3,050 கோடியை அபராதமாக விதிக்க கடந்த 2016 அக்டோபரில் பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், இந்த அபராதம் விதிக்கும் முடிவை செயல்படுத்துவது குறித்து டிசிசி தீவிரமாக பரிசீலித்து வந்தது.
இந்த நிலையில், அந்த அபராதம் விதிக்கும் முடிவை அடுத்த கூட்டம் வரை டிசிசி ஒத்தி வைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்தமாக பரிந்துரைத்த தொகையில், ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு தலா ரூ.1,050 கோடியும், ஐடியா செல்லுலார் நிறுவனத்துக்கு ரூ.950 கோடியும் அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நிறுவனங்கள் போதிய அளவில் இண்டர்கனெக்ஷன் வசதியை வழங்காததால் ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து அழைக்கப்பட்ட 75 சதவீத அழைப்புகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து டிராய் இந்த முடிவை மேற்கொண்டது.