தற்போதைய தேதி வரையில், இந்தியா முழுவதும் 6.8 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது:
தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 6,83,317 நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளன. கம்பெனிகள் பதிவாளரிடம் பதிவு செய்து கொண்டுள்ள 18,94,146 நிறுவனங்களில் இது 36.07 சதவீதமாகும்.
அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 1.42 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, தில்லியில் 1.25 நிறுவனங்களும், மேற்கு வங்கத்தில் 67,000 நிறுவனங்களும் தங்களது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டுள்ளன.
அதேசமயம், சிக்கிம் மாநிலத்தில் ஒரு நிறுவனம் கூட மூடப்படவில்லை.
நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்கள் குறித்து கண்டறிய பிரத்யேக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2016-2019 நிதியாண்டுகளுக்கிடையில் வடகிழக்கு மண்டலத்தில் 2,448 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.