இந்தியாவில் தங்கத்தின் தேவை நடப்பாண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் (இந்தியா) சோமசுந்தரம் பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:
இந்தியாவில் தங்கத்தின் தேவை கடந்த 2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 151.5 டன்னாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டில் இதே கால அளவில் தங்கத்துக்கான தேவை 5 சதவீதம் உயர்ந்து 159 டன்னைத் தொட்டுள்ளது. இது, மதிப்பின் அடிப்படையில் ரூ.41,680 கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகரித்து ரூ.47,010 கோடியாக இருந்தது.
முதல் காலாண்டின் பிற்பகுதியில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்திருந்தது மற்றும் ரூபாய் மதிப்பு வலுப்பெற்றது ஆகியவை இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரிக்க முக்கிய காரணங்களாக அமைந்தன.
திருமண காலத்தை முன்னிட்டு ஆபரணங்கள் விற்பனை சூடுபிடித்ததையடுத்து, ஆபரண துறையில் தங்கத்தின் தேவை 5 சதவீதம் உயர்ந்து 125.4 டன்னாக இருந்தது. இது மதிப்பின் அடிப்படையில் ரூ.32,790 கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகரித்து ரூ.37,070 கோடியானது. தங்க கடத்தல் நடவடிக்கைகள் வெகுவாக குறைந்துள்ளன. இருப்பினும், சுங்க கட்டணங்களை குறைப்பது உள்ளிட்ட ஆபரண துறைக்கு சாதகமான சில கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால் தேர்தலுக்குப் பிறகு கள்ளச் சந்தையில் தங்கம் விற்பனை மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்து விடும்.
அக்ஷய திரிதியை, பாரம்பரிய திருமண காலம், வேளாண் பொருள்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சாதகமான அம்சங்களால் இரண்டாம் காலாண்டில் ஆபரண விற்பனை விறுவிறுப்படைந்து தங்கத்துக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்றார் அவர்.