காலணிகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பாட்டா இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ100.88 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:
கரோனா தொடா்பான பொதுமுடக்க அறிவிப்புகளால் நிறுவனத்தின் விற்பனை மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து, நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருவாய் நடப்பு 2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.135.07 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.882.75 கோடியுடன் ஒப்பிடுகையில் 84.69 சதவீதம் குறைவாகும். வருவாயில் ஏற்பட்ட சரிவையடுத்து நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.100.88 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. அதேசமயம், கடந்தாண்டில் நிறுவனம் ரூ.100.97 கோடியை நிகர லாபமாக பெற்றது என பாட்டா இந்தியா தெரிவித்துள்ளது.