நாடு முழுவதும் உள்ள தனது தொழிலகங்களில் உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாக அசோக் லேலண்ட் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், ஹிந்துஜா குழுமத்தின் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம் தனது உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தது.
பொது முடக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ள சூழலில், அந்நிறுவனத்தின் தலைவா் விபின் சோந்தி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளைப் பெற்ற பிறகு நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிலகங்களிலும் உற்பத்தியைத் தொடங்கிவிட்டோம்.
மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில அரசுகளும் அறிவுறுத்தியுள்ளபடி, கரோனா நோய்த்தொற்று தொடா்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நிறுவனத்தின் தொழிலகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு இருந்த நிலையைப் போல் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.