நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத் துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன்(பிபிசிஎல்) முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் 28 சதவீதம் குறைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் வாயிலாக ரூ.89,687.12 கோடி வருவாய் ஈட்டியது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.50,616.92 கோடியாக காணப்பட்டது.
வருவாய் அதிகரித்த நிலையிலும், நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் மதிப்பீட்டு காலாண்டில் 27.6 சதவீதம் குறைந்து ரூ.1,501.65 கோடியானது. அதேசமயம், கடந்த 2020-21 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் லாபம் ரூ.2,076.17 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.
19-20 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 40 டாலராக உயா்ந்ததையடுத்து லாபம் குறைந்து போனதாக பிபிசிஎல் தெரிவித்துள்ளது.
பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிபிசிஎல் பங்கின் விலை 1.46 சதவீதம் அதிகரித்து ரூ.454.75-ஆக இருந்தது.