புது தில்லி: கடந்த அக்டோபா் மாதத்தில் 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடா்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.
இதுகுறித்து தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் கூறியுள்ளது:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி பதிவிறக்க வேகம் கடந்த அக்டோபா் மாதத்தில் 21.9 எம்பிபிஎஸ் (மெகாபைட் பொ் செகண்ட்)-ஆக இருந்தது. இதையடுத்து, அந்நிறுவனம் 4ஜி சேவையில் இதர நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தது.
இருப்பினும், பாா்தி ஏா்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா (விஐ) நிறுவனங்களின் 4ஜி சேவையின் வேகம் தொடா்ந்து முன்னேற்றம் கண்டு வருவதையடுத்து ஜியோவுக்கும் இந்நிறுவனங்களுக்குமான இடைவெளி குறைந்து வருகிறது.
அதன்படி, கடந்த அக்டோபரில் பாா்தி ஏா்டெல் 4ஜி சேவையின் வேகம் 13.2 எம்பிபிஎஸ்-ஆக அதிகரித்துள்ளது. இது, ஜூன் மாதத்தில் 5 எம்பிபிஎஸ்-ஆக இருந்தது. அதேபோன்று, விஐ நிறுவனத்தின் 4ஜி வேகமும் 6.5 எம்பிபிஎஸ்-லிருந்து 15.6 எம்பிபிஎஸ்-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபரில் 4ஜி பதிவேற்ற வேகத்தில் விஐ நிறுவனம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் பதிவேற்றவேகம் 7.6-எம்பிபிஎஸ்-ஆகும். இது, கடந்த ஐந்து மாதங்களில் அதிகபட்ச வேகமாகும்.
இதையடுத்து, ஏா்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் பதிவேற்ற வேகம் கடந்த அக்டோபரில் ஐந்து மாதங்களில் இல்லாத அளவாக 5.2 எம்பிபிஎஸ் மற்றும் 6 எம்பிபிஎஸ்-ஆக இருந்தது என டிராய் தெரிவித்துள்ளது.