மத்திய அரசுக்கு சொந்தமான என்பிடிசி, பிஜிசிஐஎல் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டுக்கு ரூ.2,593 கோடி ஈவுத் தொகையை வழங்கியுள்ளன.
இதுகுறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையின் (டிஐபிஏஎம்) வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
என்பிடிசி நிறுவனத்திடமிருந்து நடப்பு நிதியாண்டுக்காக ரூ.1,560 கோடி ஈவுத்தொகையை மத்திய அரசு பெற்றுக் கொண்டுள்ளது. அதேபோன்று, பிஜிசிஐஎல் நிறுவனத்திடமிருந்தும் ரூ.1,033 கோடி ஈவுத்தொகை பெறப்பட்டுள்ளது.
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கு இதுவரையில் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக ஒட்டுமொத்த அளவில் ரூ.7,515 கோடி ஈவுத்தொகை பெறப்பட்டுள்ளது.
இவைதவிர, பங்கு விலக்கல் திட்டத்தின் மூலம் சிறுபான்மை பங்குகளை விற்பனை செய்த வகையில் மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.9,110 கோடியை திரட்டியுள்ளதாக டிஐபிஏஎம் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.