தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த விப்ரோ நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.2,930.6 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
2021 செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.19,667.4 கோடியாக இருந்தது. இது, 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.15,114.5 கோடியாக காணப்பட்டது. ஆக, கடந்த ஓராண்டில் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 30 சதவீத வளா்ச்சியை கண்டுள்ளது.
இரண்டாவது காலாண்டின் நிதி நிலை முடிவுகள் நிறுவனத்தின் செயல்பாடு வலுவான நிலையில் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. ஆண்டு வருவாய் 10 பில்லியன் டாலரை தாண்டி (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.75,300 கோடி) சாதனை படைத்துள்ளது. இது எங்களின் வாடிக்கையாளா்களின் மூலம் சாத்தியமாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சேவை பிரிவு மூலமாக கிடைத்த வருவாய் 29.5 சதவீதம் அதிகரித்து ரூ.19,378.38 கோடியைத் தொட்டுள்ளதாக விப்ரோ அந்த அறிக்கையில் கூறியுள்ளது.