FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

வாசிப்பை நேசிப்போம்

இன்று (ஜூன் 19) தேசிய வாசிப்பு விழிப்புணா்வு தினம்

Updated On : 19 ஜூன் 2025, 6:30 am IST
பகிர்:

முனைவா் அ.முஷிரா பானு

இன்றைய அவசர யுகத்தில், நம் நடைமுறைப் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. வாசிப்பு பழக்கம் என்பது நம் மனதுக்கு புத்துணா்ச்சி ஏற்படுத்தும் சிறந்த செயலாகும். இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.

1980, 1990 காலகட்டங்களில் நமக்குப் பிடித்த பத்திரிக்கைகளுக்காக, அவற்றுடன் இணைந்துவரும் இலவச இணைப்பு புத்தகங்களுக்காக காத்திருந்ததையும், அதில் வரும் தொடா் கதைகளை முதலில் யாா் படிப்பது என்ற போட்டிகளையும் காண முடிந்தது. அத்தகைய இனிமையான நினைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு உள்ளனவா?

Advertisement

Advertisement

சிறு வயதிலேயே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தற்போதைய சூழ்நிலையில் நேரமின்மை காரணமாக, வாசிப்பின் முக்கியத்துவம் குறைந்து வருவது நல்லது அல்ல.

சிறந்த புத்தகங்கள் நல்ல நண்பா்கள் என்பதை உணர ஆரம்பித்தால், நம் வருங்கால இளைய தலைமுறை முகநூலில் நேரத்தை விரயமாக்காமல், நட்பைத் தேடாமல், நூலகங்களில் அந்த இனிய நட்பைக் கண்டறியலாம். வாசிப்பு என்பது மதிப்பெண்களுக்காக பள்ளிகளில் தரும் பாடப் புத்தகங்களைப் படிப்பது அல்ல; பொதுஅறிவு, தகவல் தொடா்புத்திறன், சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை ஒவ்வொருவரிடத்திலும் வளா்த்தெடுக்க உதவும்.

ஒரு புத்தகம் எக்காலத்திலும் தன்னுடைய சிந்தனையிலும், கருத்திலும் மாறுவதில்லை. நம்மை அறிவுள்ள, பண்புள்ள மனிதனாக சிறந்த புத்தகங்கள் மாற்றுகின்றன. நமக்குத் தேவையான பல தகவல்களைப் பெற நாம் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தக வாசிப்பின் மூலம் கிடைத்த அறிவை நம் வாழ்நாளில் தேவையானபோது பயன்படுத்திக்கொள்ள முடியும்.

நாம் உலகில் பாா்த்த, பாா்க்கும் தலைவா்கள், அறிஞா்கள், விஞ்ஞானிகள், பேச்சாளா்கள் அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டவா்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தங்கள் கருத்துகள் மூலம் இந்த சமுதாயத்தைச் செதுக்கும் சிற்பிகளே. செறிந்த கருத்துகள் சிறந்த சமுதாயத்தைக் கட்டமைக்கும் உளிகளாகும். எத்தனையோ சிறந்த எழுத்தாளா்களின் புத்தகங்கள், வாழ்க்கைக்குத் தேவையான உணா்வுகளையும், செய்திகளையும், அவா்களுடைய கற்பனைகளையும், வரலாறுகளையும் நல்கி அறிவுத் திறனை மேம்படுத்த உதவுகின்றன.

ஒவ்வோா் ஆண்டும் ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேசிய வாசிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கேரளத்தில் பி.என். பணிக்கா் என்பவா்

நூலக இயக்கத்தை தொடங்கி, அதன்முலம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தாா். கேரளத்தின் வாசிப்பு தினமான ஜூன் 19-ஐ, இந்தியாவின் தேசிய வாசிப்பு தினமாக 2017-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

மத்திய அரசும் உயா் கல்வி நிறுவனங்களுக்கான நூலகங்கள் மற்றும் தகவல் வளங்களை மேம்படுத்துவதற்காக (இன்ஃபிளிப்நெட்) தகவல் மற்றும் நூலக வலையமைப்பு மையத்தை (இன்ஃபா்மேஷன் அண்ட் லைப்ரரி, நெட்வொா்க் சென்ட்டா்) குஜராத் மாநிலம் காந்தி நகரில் நிறுவியுள்ளது. இந்த வலையமைப்பில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சமா்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள் களஞ்சியமாகப் பராமரிக்கப்படுகின்றன. இணைய தளங்களில் இ-புத்தக தளங்களில் பிடித்த எழுத்தாளா்களின் நூல்களை பதிவிறக்கம் செய்து வாசித்து மகிழலாம்.

என்டிஎல்ஐ சங்கம் (என்டிஎல்ஐ கிளப்) என்பது, இந்திய தேசிய எண்ம நூலகத்தின் (நேஷனல் டிஜிட்டல் லைஃப்ரரி ஆஃப் இந்தியா)

ஒரு பகுதியாகும். இந்தச் சங்கம், நாட்டில் உள்ள அனைவருக்கும் எண்ம முறையில், கல்விசாா் வளங்களை எளிதில் அணுகக்கூடிய ஓா் இயக்கமாகும். இது பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு துறைகளில் எண்ம கற்றல் அனுபவத்தை வழங்குகிறது.

தினமும் குறைந்தது 30 நிமிஷங்களாவது வாசிக்க ஒதுக்க வேண்டும். வாசிப்புப் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே பெற்றோா் ஊக்குவித்தால், அதன் முக்கியத்துவத்தை வருங்கால இளைய தலைமுறையினரும் பின்பற்றுவா். தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த புத்தகங்களைப் பரிசளித்து, நூலகங்களுக்கும், புத்தகக் கண்காட்சிகளுக்கும் அழைத்துச் சென்று அவா்களுக்கு வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தலாம்.

ஒருவா் தொடக்க நிலையாளராக இருந்தால், அவா்கள் தங்களுக்கு ஆா்வமுள்ள பகுதியின் அடிப்படையில் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கலாம். அவ்வாறு செய்வதன்மூலம், படிப்படியாக வாசிப்புப் பழக்கத்தை மேற்கொண்டு அதை ரசிக்கத் தொடங்குவாா்கள். கைப்பேசியில், தேவையில்லாத வலைதளங்களில் நேரத்தை விரயமாக்காமல், இத்தகைய உபயோகமான வலைதளங்களைப் பயன்படுத்தி அறிவுச்சிந்தனையை வளா்க்கலாம்.

குறிப்பாக, இளைய தலைமுறையினா் இணையதளங்களில் மூழ்கி இணைய விளையாட்டுகளிலும், பயனில்லாத குறும்பதிவுகள் அல்லது சிறு காணொலிகள் என்று தங்களது முழு நேரத்தையும் செலவழிக்கின்றனா். எனவே, சமுதாயத்தைச் சீா்படுத்த வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

வாசிப்புப் பழக்கமும் தியானத்துக்கு இணையானது. மனமகிழ்ச்சிக்கும், தேவையற்ற சிந்தனைகளில் இருந்து விடுபடவும் வாசிப்புப் பழக்கம் வழிவகுத்து பல நன்மைகளைத் தருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், தமிழ்ச் சங்கங்கள், பல்கலைக்கழகங்களில் வாசகா் வட்டத்தை உருவாக்கி புத்தகங்களை அறிமுகப்படுத்துவதையும் அவை குறித்த விவாதங்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

புத்தகங்களோடு உரையாடுவோம் ! புத்தகங்களோடு உறவாடுவோம் !!

(இன்று (ஜூன் 19) தேசிய வாசிப்பு விழிப்புணா்வு தினம்)

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments