வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக விண்ணப்பங்கள் வழங்கும் பணியில்... படம்: Express
நடுப்பக்கக் கட்டுரைகள்

புதிய நடை​முறை அல்ல!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் தீவிரமும் அதிலுள்ள நடைமுறை சிக்கல்களையும் பற்றி...

முனைவா் வைகைச்செல்வன்

இந்தியா முழுவதும் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்மூலம் போலி வாக்காளர்களின் பெயர்கள், இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ‘வாக்கு திருட்டு' எனவும், லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. இருந்தபோதிலும், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, அங்கு வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்துள்ளது.

அதைத் தொடர்ந்து தமிழகம், கேரளம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா உள்பட 12 மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களான புதுவை, அந்தமான் - நிகோபர் தீவுகள், லட்சத்தீவுகளிலும் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மாநிலங்களின் பட்டியலில், அஸ்ஸôம் மட்டும் ஏன் இடம் பெறவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், "இந்திய குடியுரிமைச் சட்டத்தில் அஸ்ஸாமுக்கு தனிப் பிரிவுகள் உள்ளன.

மேலும், அங்கு உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் குடியுரிமை சரிபார்ப்புத் திட்டம் தற்போது முடியும் நிலையில் உள்ளது. எனவே, ஜூன் 24-ஆம் தேதி சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஆணை ஒட்டுமொத்த நாட்டுக்குமானது. ஆனால், அது அஸ்ஸôமுக்கு மட்டும் பொருந்தாது. எனவே, அந்த மாநிலத்துக்கென்று தனி ஆணை பிறப்பிக்கப்படும்' என்று பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் 100% முழுமையானதாக இல்லை. இரட்டை வாக்குகள், இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்யாமல் இருப்பது, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது என அவ்வப்போது சுருக்கத் திருத்தம் மற்றும் தீவிர திருத்தம் எனத் தேர்தல் ஆணையம் மேற்கொள்வது என்பது இயல்பாக நடைமுறையில் இருந்துவரும் நிலையில், தமிழகத்தில் திமுக அரசு எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்தியாவின் சிறப்பே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவதுதான். அதற்கு இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலைச் சரி பார்க்க வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் 100% சரியானதாக இல்லை என்பதற்கு, 2023-இல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலே சாட்சியாக இருக்கிறது. அந்தத் தொகுதியில் வசிக்காத 40 ஆயிரம் பேர் மற்றும் இறந்தவர்கள் 8 ஆயிரம் பேர் என வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

2024 மக்களவைத் தேர்தலின்போது, சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இறந்தவர்கள் உள்பட 44,000 பெயர்கள் வாக்காளர் பட்டியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி 31,000 பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டன. எனவே, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை அதிமுக வரவேற்கிறது.

இந்த நிலையில், திமுக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது; சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல்தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை திமுக எதிர்க்கவில்லை என்றும், போதுமான கால அவகாசம் தராத நிலையில், தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில் இதை அவசரமாகச் செய்வது சரியாக இருக்காது என்றும் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்பதை ஆராய்ந்தால், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள்தான். இந்த நடைமுறையில் முழுமையாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும். பொதுவாக, ஒரு சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், மற்றொரு சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையே அவ்வப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவை மட்டுமே மேற்கொள்ளப்படும். ஆனால், இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மொத்தமாக வாக்காளர் பட்டியலை மாற்றியமைக்கும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து பலமுறை வாக்களித்து இருப்பவர்கள் உள்பட புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்போர் என அனைவரும் புதிய படிவங்களை உரிய ஆவணங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் இணைந்தோர், தங்களின் பிறந்த தேதி, வசிப்பிடத்துக்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். கூடவே வாக்காளரின் பெற்றோரில் இருவர் அல்லது ஏதேனும் ஒருவரின் அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை இணைத்து படிவங்களை சமர்ப்பித்தால் வாக்குரிமை அப்படியே இருக்கும். இல்லையென்றால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும். இதனால், இந்த முறையை திமுக எதிர்க்கிறது. ஏனென்றால், பிகாரில் பலரும் புலம்பெயர் தொழிலாளர்கள் என்பதால், அவர்களால் உரிய நேரத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாது. ஆதாரை ஆவணமாக ஏற்க முடியாது என்பது தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு.

அதே நேரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பதன் நோக்கம் தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதையும் நோக்கமாகக் கொண்டது எனவும், நகரமயமாக்கல், புலம்பெயர்தல், தகுதியற்றவர்கள் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்படாதது, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வாக்குரிமை வைத்திருப்பது போன்ற பல காரணங்களால்தான் இந்த தீவிர திருத்தம் செய்யப்படுகிறது எனவும் தனது நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுப்பது நியாயமானதாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழ்நாட்டிலும் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என்பது புதிய நடைமுறை அல்ல; ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட நடைமுறைதான். கடந்த 2003-ஆம் ஆண்டு இறுதியாக வாக்காளர் திருத்தம் என்பது முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.

அதன்பிறகு, ஆண்டுதோறும் வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியாகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்புகூட வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியானது. அதன்படி, 2003-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்கள், வாக்காளர் பதிவுப் படிவங்களை உரிய ஆவணங்களுடன் திரும்பவும் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்படி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில எல்லைகள் ஒரு தடையல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அதாவது, ஒரு வாக்காளர், தற்போது வசிக்கும் மாநிலத்தின் முந்தைய சீராய்வுப் பட்டியலுடன் இணைப்பை நிரூபிக்க முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள எந்தவொரு மாநிலத்தின் கடைசியாகச் செய்யப்பட்ட சீராய்வுப் பட்டியலையும் பயன்படுத்த இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் இருந்த மாநில எல்லைக் கட்டுப்பாடு என்பது தற்போது நீக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி ஒருவர், இப்போது சென்னையில் வாக்காளராகப் பதிவு செய்திருந்தால், அவரது பெயர் அல்லது அவரது பெற்றோர் அல்லது உறவினர் பெயர் மேற்கு வங்கத்தின் 2002 வாக்காளர் பட்டியலில் இருந்தால் போதும், அவர் தமிழ்நாட்டில் வாக்காளராக நீடிக்கத் தகுதி பெறுவார் என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

இந்த மாற்றங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுவிடுமோ என்ற அச்சம் நீங்கி, அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் எளிதாகவும், வெளிப்படையாகவும் தங்களை இணைத்துக் கொள்ள ஒரு தெளிவான பாதை ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருமேயானால், நீதிமன்றத்தின் கருத்தும் விரைவாக எதிர்பார்க்கப்படுகிறது. பிஎல்ஓ-க்கள் எனப்படும் அதிகாரிகள் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கவில்லை என்றும், படிவங்கள் வந்து சேரவில்லை என்றும் திமுக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சில தொகுதிகளில் பிஎல்ஓ-க்கள் படிவங்களைக் கொடுத்துவிட்டு மறுநாளே நிறைவு செய்து தர வேண்டும் என்று கேட்பது சட்டத்துக்குப் புறம்பானது. தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள ஒரு மாத கால அவகாசத்துக்குள் திருப்பித் தரலாம் என்கிற நிலைப்பாட்டில் தேர்தல் ஆணையம் தனது உறுதித்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT