தமிழ்ப் படங்களுக்கான வரிவிலக்கு: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
இந்த மேல் முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழ்ப் படங்களுக்கான வரிவிலக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த ஏழாம் அறிவு திரைப்படத்துக்கு வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்தோடு காலதாமதமாக கேளிக்கை வரிவிலக்கு வழங்கி, வரிவிலக்கின் பயன் எங்களுக்குக் கிடைக்கவிடாமல் செயல்பட்டதால், கேளிக்கை வரிவிலக்கு அளிக்க தமிழக அரசின் அரசாணைகளை ரத்து செய்ய உத்தரவிடவேண்டி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
Advertisement
இந்த மேல் முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. விண்ணப்பித்த இரண்டு வாரங்களுக்குள் குழு படத்தைப் பார்வையிடவேண்டும். தனது பரிந்துரையை ஒரு வாரக் காலத்துக்குள் அரசுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அடுத்த இரண்டு வாரத்துக்குள் அரசாணை வெளியிடவேண்டும், முதலில் வந்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.