சரப்ஜித் சிங்கின் கதையில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்!
சரப்ஜித் சிங்கின் சகோதரியின் (தல்பிர் கவுர்) கோணத்தில் கதை சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் சிறைக் கைதிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்த இந்தியர் சரப்ஜித் சிங்கின் கதை திரைப்படமாக உள்ளது. மேரி கோம் படத்தை இயக்கிய ஓமங் குமார் இப்படத்தை இயக்குகிறார். இதில் ஐஸ்வயா ராய் நடிக்க உள்ளார்.
கடந்த 1990-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சரப்ஜித் சிங் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு சக கைதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
அதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஜின்னா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு அவர் மீளமுடியாத கோமா நிலையை அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அனுப்புமாறு இந்திய அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அதை பாகிஸ்தான் அரசு ஏற்கவில்லை. பிறகு அவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
சரப்ஜித் சிங்கின் வாழ்க்கையைப் படமாக்க உள்ளார் ஓமங் குமார். சரப்ஜித் சிங்கின் சகோதரியின் (தல்பிர் கவுர்) கோணத்தில் கதை சொல்லப்படுகிறது. அந்த வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரை எனக்கு முன்பே தெரியும். கதை சொன்ன 15 நிமிடங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார். கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றார் இயக்குநர் ஓமங் குமார்.