துப்பாக்கியை விடவும் 10 மடங்கு: விஜய்-அட்லீ படம் பற்றி தயாரிப்பாளர் தாணு
நான் அதிகமாக சொல்வதாக நீங்கள் நினைக்கக்கூடாது. நான் சொன்னதெல்லாம் செய்யக்கூடியவன்தான்.
அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பூஜை இன்று சென்னையிலுள்ள கேரளா ஹவுஸில் நடைபெற்றது.
படபூஜை முடிந்தபிறகு தயாரிப்பாளர் தாணு பேட்டியளித்தார். இயக்குநர் அட்லீயை அருகில் வைத்துக்கொண்டு அவரை மிகவும் பாராட்டிப் பேசினார். தாணு கூறியதாவது:
தம்பி (அட்லீ) சொன்னார், நான் தயாரித்த 33 படங்களில் இது சிறந்த படமாக இருக்கும் என்று. அதைவிட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். விஜய்யை வைத்து சச்சின், துப்பாக்கி படங்களைத் தயாரித்துள்ளேன். இது என் திரைத்துறை வாழ்க்கையில் சிறந்த படமாக இருக்கும். 10 கரன் ஜோஹரை உள்ளடக்கிய கவிதைத்தனமான, கமர்சியல்தனமான நல்ல இயக்குநர் அட்லீ. இவருடைய பஞ்ச் எக்ஸ்டிராடினரியாக உள்ளது.
Advertisement
(நிருபர்களைப் பார்த்து) இப்போது இவருடன் பேசி, பழகுவதை நீங்கள் படத்தின் வெற்றிக்குப் பிறகு நினைவு கூர்வீர்கள். தெளிந்த நீரோடையாக உள்வாங்குகிறார். அதை வெளிப்படுத்துவது அதை விடவும் சிறப்பாக உள்ளது. ஆகவே எத்தகையை எழுச்சி என்றாலும் அதற்கு எடுத்துக்காட்டானவர், அட்லீ தான்.
ஷங்கர் நேற்று என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவரிடம் சொன்னேன். ஷங்கர், உன்னுடைய தலையாய சிஷ்யனாக அட்லீ வருவான், எழுதிவைத்துக்கொள்ளுங்கள் என்றேன். உண்மைதான் சார். என்னுடன் பழகின காலத்தில் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன் என்றார் ஷங்கர். அதற்கு அத்தாட்சியாக இந்தப் படம் இருக்கும். ஒரு சிறந்த இயக்குநரை எங்களுக்குத் தந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கிறேன் என்று ஷங்கரிடம் சொன்னேன்.
விஜய்யின் படங்களின் துப்பாக்கிதான் ஹைலைட்டாக இருக்கக்கூடிய படம். நான் அதிகமாக சொல்வதாக நீங்கள் நினைக்கக்கூடாது. நான் சொன்னதெல்லாம் செய்யக்கூடியவன்தான். துப்பாக்கிக்கு 10 மடங்கு இந்தப் படம்.
அட்லீ, பாடல் வாங்கும் விதத்தைப் பார்த்து எனக்கு சிலிர்த்துவிட்டது. படம் வெளிவரும்போது இந்த நாளை நினைவில் கொள்க. அட்லீ, உலகின் சிறந்த இயக்குநராக வருவார் என்றார்.