இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
இந்தியாவையும் சீனாவையும் நரகத்தின் குழிகள் என்ற டிரம்ப்பின் கருத்து சர்ச்சையான நிலையில், தற்போது இந்தியாவின் உயர் தலைவருடன் நட்புறவு கொண்டிருப்பதாகவும் பேச்சு
இந்தியாவையும் சீனாவையும் நரகத்தின் குழிகள் என்ற கருத்து சர்ச்சையான நிலையில், இந்தியாவின் உயர் தலைவருடன் நட்புறவு கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அரசியல் விமர்சகரும் வானொலி தொகுப்பாளருமான மைக்கேல் சாவேஜ், ஒரு பாட்காஸ்டில் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் குறித்து இனவெறிக் கருத்துகளைக் கூறியிருந்தார். இந்த நிலையில், அவரின் கருத்துகள் அடங்கிய பதிவை அதிபர் டிரம்ப்பும் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்த பதிவில் தெரிவித்ததாவது, இந்தியா மற்றும் சீன நாட்டினர், அவர்களின் ஒன்பதாவது மாதத்தில் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாக அமெரிக்காவுக்கு வருகின்றனர். பின்னர், பிறப்புரிமைக் குடியுரிமைச் சட்டத்தின்கீழ் அவர்கள் உடனடியாக அமெரிக்க குடிமக்களாக மாறிவிடுகின்றனர். அவர்கள் நரகத்தின் குழிகள்.
Advertisement
நாட்டில் அனைத்து குண்டர்களும் ஒன்றுசேர்ந்து செய்யும் குற்றங்களைவிட, இவர்களால்தான் நாட்டுக்கு அதிக சேதம் ஏற்படுகிறது. மடிக்கணினிகளுடன் கூடிய குண்டர்கள் இவர்கள்.
அவர்கள் நம்மைச் சூறையாடி, நம்மை இரண்டாம்தர குடிமக்களைப்போல நடத்துவதுடன், நமது கொடியை மிதித்து, இன்னும் பலவற்றையும் செய்கின்றனர்.
கலிபோர்னியாவில் உள்ள ஓர் உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் வெள்ளை இன (அமெரிக்கர்கள்) ஆண்களுக்கு பூஜ்ஜிய வேலைவாய்ப்பு என்று அறிவதற்கு முன்னர்வரையில், இந்தியர்களுக்கு பெரும் ஆதரவாளராகவே நான் (சாவேஜ்) இருந்து வந்தேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, டிரம்ப்பின் கருத்துகள் குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பியபோது, அதனை விட்டுவிடுவதாகக் கூறினார்.
டிரம்ப்பின் இந்தக் கருத்துகள் சர்ச்சையானதையடுத்து, தற்போது இந்தியாவை சிறந்த நாடு என்று டிரம்ப் பாராட்டியதாக அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
இதுகுறித்து, தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோபர் எல்ம்ஸ் கூறியதாவது, இந்தியா ஒரு சிறந்த நாடு என்று அதிபர் டிரம்ப் பாராட்டினார். இந்தியாவின் உயர் பதவியில் நல்ல நண்பர் ஒருவர் இருப்பதாக டிரம்ப் கூறியதாகத் தெரிவித்தார்.