தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நயன்தாரா மீது டி.ராஜேந்தர் புகார்
பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்தவுடன், அவருக்குச் சேர வேண்டிய சம்பளப் பாக்கியைக் கொடுத்து விடுகிறோம்.
‘இது நம்ம ஆளு’ படத்தில் பாக்கியுள்ள 2 பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்துத்தர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி. ராஜேந்தர் புகார் செய்து உள்ளார்.
சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் டி.ராஜேந்தர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், ‘இது நம்ம ஆளு.’ இந்தப் படத்தின் 2 பாடல் காட்சிகளில் நடிக்க நயன்தாரா மறுத்துள்ளதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி. ராஜேந்தர் புகார் செய்து இருக்கிறார்.
அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
Advertisement
‘என் மகன் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவிகிதத் தொகையைக் கொடுத்து விட்டேன். மீதி 25 சதவிகிதச் சம்பளம் மட்டுமே பாக்கி உள்ளது. படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக நயன்தாராவின் மானேஜரிடம் பேசினோம். இந்த மாதம் ஐந்து நாள்களும், அடுத்த மாதம் ஐந்து நாள்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால் இதற்கு நயன்தாரா மறுத்துவிட்டார்.
பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்தவுடன், அவருக்குச் சேர வேண்டிய சம்பளப் பாக்கியைக் கொடுத்து விடுகிறோம். எனவே மீதமுள்ள பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்து படத்தை முடித்துத்தர தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும்.’ என்று புகாரில் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.