தாமதமாகும் மணிரத்னம் படம்! காரணம் என்ன?
துல்கர், நித்யா மேனன் இருவருடைய கால்ஷீட்டும் கிடைப்பதிலும் சிக்கல்கள் உள்ளன.
மணி ரத்னத்தின் புதிய படம் திட்டமிட்டபடி டிசம்பரில் தொடங்கப் போவதில்லை. மேலும் தாமதமாகத் தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணி ரத்னத்தின் புதிய படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா மேன போன்றோர் நடிக்கிறார்கள். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகும் என்று முதலில் தகவல் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது படப்பிடிப்பு ஆரம்பமாக இன்னும் சில மாதங்களாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
படத்தை முதலில் தமிழில் மட்டுமே எடுக்க மணி ரத்னம் எண்ணினார். ஆனால் இப்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்க முடிவெடுத்துள்ளார். தமிழுக்கான நடிகர்களைத் தேர்வு செய்துவிட்டாலும் தெலுங்குப் படத்துக்கென்று தனியாக நடிகர்களைத் தேர்வு செய்ய இருக்கிறார். அதனால் டிசம்பருக்குள் படப்பிடிப்பை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என்று சொல்லப்படுகிறது.
அடுத்ததாக துல்கர், நித்யா மேனன் இருவருடைய கால்ஷீட்டும் கிடைப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. துல்கர் மலையாளப் படமொன்றில் பிஸியாக உள்ளார். டிசம்பருக்குள் இதன் படப்பிடிப்பு முடிவடைய வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. நித்யா மேனன் 24 மற்றும் கன்னடப் படமொன்றில் நடித்து வருவதால் அவராலும் டிசம்பருக்குப் பிறகே மொத்தமாக மணி ரத்னம் படத்துக்கு கால்ஷீட் தரமுடியும் என்று சொல்லப்படுகிறது. இதனால் மணி ரத்னத்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு 2016-ல் தான் தொடங்கும்.