பல்ராம் நாயுடுவாக மீண்டும் நடிக்கிறார் கமல்!
தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் கமல்.
டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் கமலும் ஷ்ருதி ஹாசனும் நடிக்க உள்ள படம் குறித்த தகவல்கள் வெளிவர ஆம்பித்துள்ளன.
மீண்டு வருவது யாரென்று தெரிகிறதா என்கிற விளம்பர வாசகம் படத்தின் முதல் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. கமல் ஏற்கெனவே நடித்த ஒரு கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் மறுஉருவாக்கம் செய்ய உள்ளதாகச் சொல்லப்பட்டது. தற்போது அந்தப் புதிருக்கான விடை கிடைத்துள்ளது.
‘தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க உள்ளார் கமல். பல்ராம் நாயுடுவின் குடும்பம் இந்தக் கதையில் இடம்பெற்றுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவை கதாபாத்திரங்களுடன் ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் உள்ளன. மே 2-ம் வாரம் படப்பிடிப்பு தொடங்கும். பெரும்பாலான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறும்’ எனப் படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
கமல், ஷ்ருதியுடன் பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்க உள்ளார்கள். கமலின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும் மகளாக ஸ்ருதி ஹாசனும் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
1989–ல் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் கமல். இப்போது 26 வருடங்கள் கழித்து மீண்டும் ராஜீவ் குமாருடன் இணைகிறார் கமல். இந்தப் படத்தின் பூஜை ஏப்ரல் 29 அன்று சென்னை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகிறது. தமிழ் படத்துக்கான டைட்டிலை இளையராஜா வழங்கியதாக கமல் ஹாசன் கூறியுள்ளார். இப்படத்தின் தொடக்கவிழா, யூடியூப் வழியாக நேரலை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.